Monday, February 1, 2021

குவாண்டம் பிறந்த கதை.

 குவாண்டம் பிறந்த கதை

ஹிலால் ஆலம் என்ற ட்வீட்டர் சகவாசி குவாண்டம் பிறந்த கதையை தன்னுடைய இழையில் எழுதியிருந்தார்.
தனித்தனியே இருந்ததை வாசிக்கையில் கட்டுரை கொஞ்சம் சுஜாதாத்தனமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.

முழு இழைப் பதிவுகளையும் தொகுத்து 
- இன்னும் பிறரும் வாசிக்கட்டும் என்பதற்காகவும்,
-இந்தப் பதிவு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் 
என்னுடைய வலைப்பூவில் அவர் அனுமதியின்றி பதிவேற்றுகிறேன்

மன்னிக்க வேண்டும் ஹிலால் ஆலம்
வாசிக்க வேண்டும் மற்ற வாசகர்கள்

அன்புடன்
நூரி

இனி கட்டுரை :

நாம் ஒளியில் இருந்து தொடங்கலாம். 

கிபி 1021ல் இப்ன் பின் ஹைதம் (அல் ஹசன்) என்பவர் முதன்முதலாக பரிசோதனை முறையை இயற்பியலில் புகுத்தியதை 'கிதாப் அல் மனாசிர்' (Book of Optics)ல் பதிவு செய்தார். 
ஒரு துளை வழியே ஒளியை செலுத்தி கேமரா கண்டுபிடித்ததை பதிவு செய்து விளக்கி உள்ளார். இதுதான் முதன்முதலாக ஒளி  (அ. இயற்பியல்) பற்றிய ஆராய்ச்சியை பதிவு செய்யப்பட்ட முதல் தரவு.

(இவர் ஒரு கணிதமேதை & விண்வெளி ஆய்வாளர். ஒரு முறை தன் அரசருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தண்டனையிலிருந்து தப்பிக்க பைத்தியக்காரனைப் போல வேடமிட்ட கதை மிகவும் சுவையானது).

16 ஆம் நூற்றாண்டில் ஜென்சன் கண்டுபிடித்த நுண்ணோக்கி  ஒரு புரட்சி எனலாம். பின் 17ம் நூற்றாண்டில் கலிலியோ & பிரான்சிஸ் பேகன் ஆகியோர் பரிசோதனை இயற்பியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர்.
கலிலியோ முதன் முதலாக  தொலைநோக்கி உருவாக்கியது விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்ட கண்டுபிடிப்பு. https://t.co/HLK5ci0r2H


அதே நூற்றாண்டில் நியூட்டன் கணிதச் சமன்பாட்டை இயற்பியலில் புகுத்தி சில பல விளைவுகளை முன்கூட்டியே கணிக்கும் அளவிற்கு இயற்பியலை மேம்படுத்தினார்.

இவர் ஒளியை துகள்களால் ஆனது என்ற கருத்தை முன்வைத்தார். அந்தத் துகள் அடர்த்தியான பொருட்களில் வேகமாகச் செல்லும் என்றும் கூறினார். உண்மையில் அடர்த்தியான பொருட்கள் ஊடே ஒளி மெதுவாகச் செல்லும். அதோடு ஒளி குறுக்கீடு (interference), ஒளி மாறுபாடு (diffraction), ஒளி முனைவாக்கம் (polarisation) ஆகியவற்றிற்கு இவரால் விளக்கம் அளிக்க இயலவில்லை.


ஒளி மாறுபாடு என்றால்? ஓர் இருட்டு அறையில் கதவை லேசாகத் திறந்தால் வெளிச்சத்தின் ஊடே கருப்புக் கோடுகள் விழுவதைப் பார்த்திருப்பீர்கள். இது தான் diffraction. ஒளி, துகள்களால் ஆனது என்றால் இடையிடையே ஏன் கோடுகள்?



அதுமட்டுமல்ல போலராய்டு ஃபில்ட்டர் எனப்படும் ஒரு கண்ணாடி வழியாகப் பார்த்தால் நீரை ஊடுருவி பார்க்கலாம். ஒளி, துகள்களால் ஆனது எனில் இந்த விளைவு ஏன் நிகழ்கிறது?


இந்த நேரத்தில் ஹைஜன், யங் & ஃப்ரஸ்னல் ஆகிய அறிவியலாளர்கள் ஒளியை அலைகள் எனக் கூறினர். அந்த அலை இயந்திர ஆற்றல் (mechanical energy) கொண்டதாக கருதினர்.

அப்டின்னா? ஒரு அமைதியான குட்டை. அதில் ஒரு கல்லை எறிந்தால் அலைகள் உருவாகின்றன. இதுபோல் ஒளி, ஈதர் என்ற ஊடகத்தின் வழியே செல்கிறது என்றும் கூறினர். இப்போது இன்னொரு கல்லை எறிந்தால் இரண்டாவது அலை தோன்றி படத்தில் காட்டியது போல முதல் அலையோடு மோதி சில அலைகளை அழித்தும் சில அலைகளை பெரிதாக்கியும் விடுகின்றன.

இது ஏனென்று நியூட்டனால் துகளைக் கொண்டு விளக்கமுடியவில்லை. ஆனால் அலைகளைக் கொண்டு எளிதாக விளக்க முடிந்தது.


இங்கு அலைகளை அழிப்பதும்  ஆக்குவதைப் போலத்தான் கதவு இடுக்குகளில் நிழலும் ஒளியும் மாறிமாறி தோன்றுகின்றன.

அதேபோல பல கோணங்களிலிருந்து வரும் ஒளி அலைகளில் சிலவற்றை வடி கட்டுவதால் நீரின் ஊடே நம்மால் பார்க்க இயலுகிறது.


ஆகவே ஒளி அலை வடிவம் உடையது என ஐயமறக் கூறினர். இந்த நேரத்தில் மேக்ஸ்வெல், ஒளி, இயந்திர ஆற்றல் உடையது இல்லை. அவை மின்காந்த அலை என கூறினார்.

இப்படி ஒருவழியாக இயற்பியலில் எல்லாவற்றிற்கும் விடை கண்டுவிட்டோம் என அறிவியலாளர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

காப்புரிமை அலுவலகத்தில் ஒருவர், எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால்  தனக்கு வேலை இழப்பு ஏற்படுமோ என அஞ்சிய கதையும் உண்டு.

அந்த நேரத்தில் தேன்கூட்டை கலைத்த கதையாக, கட்டுச்சோறை கூட்டத்தில் திறந்த கதையாக ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது கதிர்வீச்சை கண்டுபிடித்தனர்.

1895ல் X ray, 1896ல்  அணுக்கதிர்வீச்சு & 1897ல் எலக்ட்ரான் என வரிசையாக கண்டுபிடிப்புகள் நிகழ அவற்றிற்கு விடை தெரியாமல் விழித்தது அறிவியல் உலகம்.

இந்த நேரத்தில் கரும்பொருள் கதிர்வீச்சு (black body radiation) பற்றி ஒரு ஆராய்ச்சி அறிவியலாளர்களை திகைக்க வைத்தது . ஒரு (கருப்பு) பொருளின் வெப்ப நிலையை உயர்த்தினால் அதன் கதிர்வீச்சு உயர்ந்து கொண்டே செல்லும் என இயற்பியல் கூறுகிறது.

இதில் என்ன திகைப்பு என்கிறீர்களா? எளிதாக சொல்லப்போனால் ஸ்விட்ச் போட்ட பின் பல்பு எரியும் போது நாம் பொசுங்கிவிடுவோம் என்கிறது 

இயற்பியல். ஸ்விட்ச் போடும்போது மின்விளக்கு இழை முதலில் சிவப்பாகி பிறகு மஞ்சளாக மாறும். அதாவது குறைந்த அதிர்வெண்ணில் இருந்து அதிக அதிர்வெண் உடைய மஞ்சள்/ வெள்ளை நிறத்தில் மாறும்போது 
இயற்பியலின் படி அந்த அதிக அதிர்வெண் அதிபயங்கரமான ஆற்றலை வெளியிடும்.
அந்த வெப்ப ஆற்றல் நம்மை எரிக்க வேண்டும்.
அதற்கு பெயர் Ultraviolet Catastrophe. ஆனால் அப்படி எல்லாம் நிகழ இல்லை.
ஏன் என்று அவர்களுக்குப் புரியவில்லை. இதோடு இன்னொரு புதிரும் இணைந்தது.
எடிசன் உட்பட சிலர் ஒரு ஆய்வு செய்தனர். சில பொருட்களின் மீது ஒளியை பாய்ச்சினால் மின்சாரம் உருவாகியது.

இதற்கும் என்ன காரணம் என்று இயற்பியல் விதிகளால் கூற இயலவில்லை.

'சூரி'யாக மாறிய அறிவியலாளர்கள், "கோட்டை எல்லாம் அழி. மொதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்" என்ற மனநிலைக்குச் சென்றனர்.

அப்போதுதான் மாக்ஸ் பிளான்க் என்பவர் ஒளியானது அலைகள் கிடையாது. அவை குவாண்டா என்று கற்றைகளாக இருக்கும் என்றார்.

"என்னங்கடா இது? மறுபடியும் மொதல்ல இருந்தா?" என்று ஆடிப் போனது. ஐன்ஸ்டீனும் ப்ளாங்கிற்கு ஆதரவாக நிற்க அறிவியல் உலகம் புதிய பாதையில் பயணிக்க ஆயத்தமானது.

அப்போது டி-ப்ராலி ஒளியானது துகள்களின் பண்பையும் அலைகளின் பண்பையும் கொண்டது என்று 20 ஆண்டு கால சர்ச்சையை முடித்து வைத்தார்.


இவ்வாறு  கிபி 1021ல் இப்ன் அல் ஹைதம் ஆரம்பித்த ஒளித்துளை கேமரா ஆராய்ச்சியானது நியூட்டன், ஐன்ஸ்டீன் ஆகியோர் வழியே  பாதைகள் பல கடந்து 1000 ஆண்டுகள் பயணித்து 2021-ல் குவாண்டம் கணினியில் வந்து நிற்கிறது.

இதுதான் குவாண்டம் பிறந்த கதை.


- ஹிலால் ஆலம்

Thursday, December 24, 2020

ஒரு வேளை ஒரு வேலை

 ஒரு வேளை ஒரு வேலை

ஒரே நேரத்தில் 100 விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்பவர்களை ‘சதாவதானி’ என்பார்கள். தமிழகத்தில் அப்படி ஒருவர் இருந்தார் அவர் பெயர் சதாவதானி செய்கு தம்பி பாவலர்.

அதே போல் 10 விஷயங்களை ஒரே நேரத்தில் கவனத்தில் வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தவர் ‘தசாவதானி’ இராமைய்யா அவர்கள்.

அவர்களெல்லாம் இலட்சத்தில் அல்ல பல கோடிகளில் ஒருவர்கள்.

ஆனால் சாமானியர்களால் ஒரே நேரத்தில் எத்தனை விஷயங்களை கவனத்தில் கொள்ள முடியும் ?

இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களே அதிக திறமைசாலிகள்.

இதற்கான விளக்கம்.

ஒரு பெண் ஒரே நேரத்தில் அடுப்பில் தோசை சுட்டுக் கொண்டே, இன்னொரு  கையில் செல்போனைப் பிடித்துக் கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் தங்கையுடன் வம்பளந்து கொண்டே, கணவன் சாப்பிடுவதையும் கவனித்துக் கொண்டே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடரையும் பார்த்துக் கொண்டே, தன் வீட்டு ஜன்னல் வழியே பக்கத்து வீட்டுக்காரம்மா வீட்டு வாசற்படியில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதையும் கவனிக்க செய்வார். இது பெண்களால் சரவ சாதரணமாய் செய்யக் கூடிய காரியம்.

உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தபடி பூக்கட்டிக் கொண்டே அல்லது வேறு ஏதாவது கை வேலை செய்து கொண்டே, அதே சமயத்தில் டி.வி யில் சீரியல் பார்த்துக் கொண்டே,  சாவியை வைத்த இடத்தை மறந்து விட்டு தேடிக் கொண்டிருக்கும் கணவனிடம் பேசவும் பெண்களால் முடியும்.

சமையலறையில் ஒரே நேரத்தில் பல வேலைகளை அதுவும் காலை நேரத்தில் அவர்கள் செய்வது எல்லோர் வீட்டிலும் தினம் தினம் நடப்பதே

ஆனால் ஆண்கள் தொலைக்காட்சியில் செய்தி கேட்டுக் கொண்டிருக்கையில் யாராவது தன்னிடம் பேசினால் செய்தியைக் கவனிக்க முடியாது. (உஷ்.. சப்தம் போடாதே, மிக்சியைக் கொஞ்ச நேரம் போடாதே எனச் சீறி டி.விக்குள்ளேயே கிட்டத்தட்ட போய்விடுவார்கள்). யாரிடமாவது போனில் பேசிக் கொண்டிருக்கையில் டி,வி யில் முக்கியமான காட்சியை விட்டு விட்டதற்காக வருத்தப்படுவோம்.

பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது மனைவி கொண்டு வந்து வைத்து விட்டுப் போன காப்பியை படிக்கும் சுவாரஸ்யத்தில் மறந்து போய் வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆறிப் போன காப்பியை குடித்துப் போகிற அவலமும் ஆண்களுக்கே நடக்கும்.

கல்யாண வீட்டுக் கூட்டத்தில் அறிமுகமே இல்லாத இன்னொரு பெண்ணின் புடவையும், அவள் அணிந்திருந்த கம்மலின் டிசைனையும் தனக்குப் பிடித்திருக்கிற காரணத்தால் ஒரு பெண் மாதக் கணக்கில் மறக்க மாட்டாள், ஆனால் ஆணால் இப்படி இன்னொரு ஆணைக் கவனித்து மனதில் வைத்துக் கொள்வது கடினம்.

இந்த வித்தியாசத்திற்குக் காரணம் படைப்பின் டிசைன்தான்.

ஆண்களால் ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் செவ்வனே செய்ய முடியும். இரண்டு வேலைகளைச் செய்தால் ஒன்றுதான் உருப்படியாக இருக்கும்.

ஆனால் பெரும்பாலான ஆண்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்யவே முயற்சிக்கிறோம்.

பலருக்கும் சாப்பிடும்போது டி.வி, பார்த்துக் கொண்டே சாப்பிட்டால்தான் சாப்பாடு இறங்கும். சிலருக்கு புத்தகம், சிலருக்கு செல்போன்.

இன்னும் சிலர் கழிவறையில் புத்தகம், செய்தித்தாள் படிப்பார்கள்.   சிலர் வாக்கிங், ஜாக்கிங் செல்லும்போது இன்னொருவருடன் பேசிக் கொண்டே அல்லது காதில் ஹெட்போன் அணிந்து பாட்டுக் கேட்டுக் கொண்டே நடப்பார்கள் / ஓடுவார்கள்.

பலரும் செல்போனில் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்குவார்கள்.

அனைவரும் சொல்லும் காரணம், 

ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்வதால் நேரம் மிச்சமாகும்’

ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

                 “இணையத்தால் நேரத்தை மிச்சப்படுத்தினேன்.                                  மீந்த நேரத்தை இணையத்தில் செலவழித்தேன்.”             

நேரத்தை மிச்சப்படுத்த நேர மேலாண்மையைத் தேடிக் கற்றுக் கொள்ளுங்கள். அதை  விட்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்வது சரியானதல்ல.

‘இப்படி செய்ததால் எந்த தவறும் நடந்ததில்லையே’ என பலரும் வாதிடலாம். எல்லா தவறுகளும் அதன் விளைவுகளும் அவ்வப்போதே தெரிவதில்லை.

சாப்பிடும்போது டி.வி, பார்த்துக் கொண்டே அல்லது புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிட்டால் உணவு உள்ளே இறங்கும். ஆனால் உங்கள் ஜீரணம் சரியாக இருக்காது. தரமான ஜீரணத்தால் மட்டுமே முழுமையான சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கும். தரம் குறைந்த ஜீரணத்தால் முழுமையான சத்துக்கள் உடலுக்குக் கிடைக்காது. போதுமான சத்துக்கள் கிடைக்காத உடல் ஆரோக்கியம் குறைந்தே இருக்கும்.  இது கண்ணுக்குத் தெரியாது. உடனேயும் தெரியாது.

கழிவறையில் பேப்பர் படித்துக் கொண்டே இருப்பவருக்கு முழுமையாக கழிவு வெளியேற உடல் மட்டுமே வழி விடும்.  உள்ளம் உத்தரவு கொடுக்காது.

புத்தகம் வாசிப்பது கூட தொந்தரவுகளில்லாமல் இருக்கும்போதுதான் முடியும். ஏனெனில் கவனம் சிதறினால் படிக்க முடியாது.

ஒரு மீட்டிங்கிற்குப் போனால் கூட  பேச்சைக் கவனித்துக் கேட்டால் மட்டுமே எதையும் உள் வாங்க முடியும்.

ஒரு ஆடியோ (ஒலி) உரையில் பெறப்படும் கவனத்தை விட வீடியோ (ஒளி ஒலி) உரையில் அதிகம் கவனிக்க முடியும். இன்னும் அதே பேச்சை வீடியோ (ஒளி ஒலி) வில் பார்த்துப் பெற்றுக் கொள்வதை விட நேரடியாகப் பார்க்கும்போது அதிகம் உள் வாங்க முடியும். இன்னும் அதையே அந்தக் கூட்டத்தின் கடைசியில் அமர்ந்து கேட்பதைக் காட்டிலும் முன் வரிசையில் உட்கார்ந்து கேட்பது அதிகமதிகம் கவனிக்க முடியும்.

வாக்கிங், ஜாக்கிங் செல்லும்போதும் அதே எண்ணத்தில் செய்தால் மட்டுமே அது உடற்பயிற்சியாய் பலனளிக்கும். புரிந்து கொள்ளுங்கள்.

தொலைவில் கண்ணில் பட்டு விட்ட நண்பரை கூவி அழைத்துக் கொண்டே வேகமாக நடந்து அவரைத் துரத்துகிறீர்கள். இப்படி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தாலும் அது நடை பயிற்சியாக ஆகாது. உங்கள் எண்ணம் நண்பரை அடைவதே. உடற்பயிற்சியல்ல.

அதே போல் புறப்பட்டு விட்ட பேருந்தைப் பிடிப்பதற்காக ஓடிச் சென்று விரட்டிப் பிடிக்கிறீர்கள்.   இதுவும் ஓட்டப் பயிற்சியல்ல. உங்கள் எண்ணம் பஸ்ஸைப் பிடிப்பதே. ஜாக்கிங் அல்ல.

வேண்டுதலுக்காக போடுகிற தோப்புக்கரணம் கூட மனதில் பிள்ளையாருக்காக என்ற எண்ணத்தோடு செய்தால் அது வணக்கம், சிறந்த உடற்பயிற்சி என்று நினைத்தால் அது உடற்பயிற்சி. 

இப்படி உங்கள் கவனம் எதுவோ அதுவாகத்தான் செயல் பலனளிக்கும்.

கவனம் சிதறினால் பதற்றம்., ., பதறிய காரியம் சிதறும்.,

ஆனாலும் கவனம் சிதறாத வகையில் சில, பல  வேலைகளை செய்ய முடியும்தான்.

மெல்லிசை கேட்டவாறே, இன்னொருவருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க முடியும்.

பாட்டுக் கேட்டுக் கொண்டே பஸ்ஸில், இரயிலில் பயணம் செய்யலாம், கார் ஓட்டலாம்.

பாட்டுப் பாடிக் கொண்டே தோட்ட வேலை செய்யலாம், துணிகளை அயர்ன் செய்யலாம்.

இவை எல்லாமே கவனம் சிதற வைக்காதவையாக இருந்தால் மட்டுமே நலம்.




இந்த வேலைகளை மேற்கொள்ளும்போது மனது ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் கொள்ளும். இன்னொன்று தன்னிச்சையாகவே நடக்கும். தன்னிச்சையாக நடக்கும் இந்த செயல்பாடுகள் பெரும்பாலும் அன்றாடம் செய்யும் வழக்கமானவையாகவே இருக்கும்.

அதற்காக அன்றாடம் செய்யும் வழக்கமானதுதான் என்று செல்போன் பேசியபடியே வாகனங்களை ஓட்டுவது சரியானதல்ல.

வாகனம் ஓட்டுவது வழக்கமானதுதான் ஆனால் திடுமென எதிரே வரும் அல்லது முந்திச் செல்லும்  எதிர்பாரா வாகனங்கள் தினமும் ஒரே மாதிரி வருவதில்லை. பேச்சில் முழு கவனம் இருக்கும்போது,  கண்களும், கைகளும், கால்களும் தன்னிச்சையாகவே செயல்படும்.  எதிர்பாரா நேரத்தில் கவனம் உடனடியாக திசை திரும்ப வேண்டும். திரும்பாதபோது விபத்துக்கள் நேரிடுகிறது.

51 சதவிகித சாலை விபத்துக்கள் செல்போன் உபயோகத்தால் நிகழ்ந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.( வாகன இயக்கம மற்றும் பாதசாரியாய் சாலையைக் கடக்குதல் உட்பட)

பதிவான விபத்துக்களின் கணக்குதான் இது. பதிவாகாதவைகள் அதிகம் இருக்கும்.

மூளையிலிருந்து உத்தரவு வரும் முன்னரே உடல் மேற்கொள்ளும் அவசர கால துரித நடவடிக்கையான அனிச்சை செயலால் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் எல்லா நேரமும் அனிச்சை செயல் உதவும் என்று உத்தரவாதம் தர முடியாது.

பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் எல்லா நேரமும் அனிச்சை செயல் உதவும் என்று உத்தரவாதம் தர முடியாது.

இதில் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. பெண்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கவனிப்பதில் எக்ஸ்பர்ட்டுகள்தான். ஆனால் அவை எல்லாம் வீட்டிற்குள் செய்யும் வழக்கமான வேலைகளுக்குள் அடங்கி விடும்.

யோசனை வேறு எங்காவது இருந்தாலேயே செய்கிற வேலைகளில் தவறுகள் நேரிடுகிறது. இப்படி இருக்க ஒரே நேரத்தில் இரு வேலைகள் என்பதில் மட்டும் எப்படி தவறுகள் நேராது? எனச் சொல்ல முடியும்.

நேரம் மிச்சமானால் வாழ்க்கையில் பல வேலைகள் செய்யலாம். ஆனால் வாழ்க்கையே ‘மிஸ்’ ஆகி விட்டால் என்ன செய்வோம்?

ஒரு நேரத்தில் ஒரு வேலை என்பதே நமக்கான  டிசைன்.

மனதை வெல்ல முடியாது. ஆனால் அதனுடன் ஒத்துழைத்தால் மட்டுமே ஆயுள், ஆரோக்கியம் எல்லாம்.

ஆகவே நம் மனதின் டிசைனுக்கேற்ப “ஒரு வேளையில் ஒரு வேலை” என  வாழ்வோம். ஆரோக்கியம் பெறுவோம்

(மூலக்கருத்து  : ஹீலர் பாஸ்கர்)

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்

 

Saturday, December 19, 2020

மகன்களுக்கு அப்பாக்கள் ஏன் வில்லனாகத் தெரிகின்றனர்..?

 மகன்களுக்கு அப்பாக்கள் ஏன் வில்லனாகத் தெரிகின்றனர்..? - வாசகரின் ஹானஸ்ட் ஷேரிங்ஸ் 


ஒரே உறையில் இரு கத்தி இருப்பதுபோல்தான் ஒரேவீட்டில் இருக்கும் அப்பாவும் மகனும்...

சில வீடுகளில் அம்மாவும் மகனும் நண்பர்களாக பழகுவார்கள். ஆனால், பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. இருவரும் ஆணாக இருப்பதில் எழும் இயல்பான ஈகோவே, உறவை சிக்கலாக்குகிறது. மகனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத்தரும் ஒருசில அப்பாக்கள் அப்படியே விட்டுவிடுவார்கள். சிலர் ஒரு நூலளவில் பிடிப்பதுபோலவே பின் தொடர்ந்து கொண்டு இருப்பார்கள். ஒரு பயமும் அக்கறையும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதுவே ஒருகட்டத்தில் விரிசலுக்கு காரணமாகிறது. பொறுப்போடு இருந்தால் சலிப்பும், அக்கறையே இல்லாமல் இருந்தால் மகனுக்கு விரக்தியும் வந்துவிடுகிறது. இதுவும் மாமியார், மருமகள் உறவு போலவே சரியாக கையாள வேண்டும்.
ஜெயமோகனின் அப்பாவும் மகனும் கதையை உதாரணமாய் சொல்லலாம்.

``வாய் பேச ஆரம்பிக்கும் குழந்தை முதலில் அம்மாவென அழைக்கும். இதைக் கேட்ட தந்தை.. அப்பா.. அப்பா சொல்லு என சொல்லிக்கொடுப்பார். குழந்தை சொல்லாது. இன்று மாலைக்குள் அப்பானு சொல்ல வைக்கிறேனு மனைவியிடம் சவால் விடுத்து நாள் முழுதும் சொல்லிக் கொடுப்பார். விரக்தியில் அப்பா கத்த மிரண்ட குழந்தைக்கு இரவு காய்ச்சல் வந்துவிடுகிறது. மருந்து கொடுத்து நள்ளிரவில் தாய் உறங்கிவிட மன்னிப்பு கேட்கும் பாவனையில் அப்பா அமர்ந்திருக்க யதேச்சையாய் முனகலில் அப்பா எனச் சொல்லும் குழந்தை. அதைக்கேட்டு பரவசத்தில் அப்போது கண்ணீர் சிந்துவார் அப்பா." இதுபோல் சென்டிமென்ட்டானவர்தான் அப்பா.
விளிம்பு நிலையிலுள்ள மகன்கள் தன் தந்தையின் தோற்றத்தையோ வசதியின்மையையோ கிண்டல் செய்வார்கள் என அப்பாக்களின் பிம்பத்தை அப்படியே ரகசியமாய் காப்பார்கள். கூட்டத்தில் உரையாடும்போது கூட அப்பா ஏதேனும் சொன்னால் அதை மேம்படுத்தி கூராக்கி மகன் சொல்வதைக் கேட்டிருக்கலாம்.

பள்ளியில் தேர்ச்சி அட்டையில் கையொப்பமிடக் கூட தன் அம்மாவையோ, உறவினரையோ அழைத்து வருவதை பார்த்திருப்போம். நமக்கு ஹீரோவாய் தெரியும் அப்பாக்களை யாராவது பொதுவெளியில் ஏதாவது பேசி விடுவார்களோ, முகம் சுழிப்பார்களோ எனும் எண்ணம் பல மகன்களிடம் இருக்கும். இதைப் `பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் பார்க்கலாம்.

மகன் தந்தையின் தவற்றைச் சுட்டிக்காட்டி திருத்தும் படைப்புகள் குறைவாகவே வந்துள்ளன. அவ்வாறு வந்தாலும் இயல்பாய் இல்லாமல் முழுவில்லனாய், தன் தாயை சீரழித்தவனாய், பொறுப்பற்றவராய் இருப்பது போலவே காண்பிப்பார்கள். இதிலிருந்து வேறுபட்டது `உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தில் வரும் ஜெமினி-கமல் உறவு. கடைசியில் மகனிடம் மானசீகமாய் தோற்கும்போது கூட தன் தந்தையை தலை குனிய வைக்காத பண்புடன் மகன் தந்தையை உயர்த்துவதாய் இருக்கும். அதாவது இருவரும் தம் கொள்கையில் விடாப்பிடியாய் இருக்கும்போது மகன் ஜெயிப்பதாக முடிந்திருக்கும்.
சிலசமயங்களில் மகன்களின் பொறுமை இன்மையினால் அப்பாக்களை புரிந்துகொள்வதில்லை. What is it? எனும் குறும்படம் இதை விளக்கும்.

``தன் வீட்டுத் தோட்டத்தில் வயதான தந்தையும் மகனும் அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு குருவி வந்து அமர்கிறது. ``அது என்ன?'' என மகனிடம் கேட்கிறார். குருவி என்கிறார் மகன். மீண்டும் மீண்டும் என்ன எனக்கேட்கும் போது பொறுமையிழந்து கத்துகிறான். அப்போது தந்தை டைரிக்குறிப்பில் நீ 3 வயதாய் இருக்கும்போது என்ன என கேட்டாய் நான் 21 முறை பதில் சொல்லியிருக்கிறேன் எனப் படித்ததும் தன் பொறுமையற்ற நிலையை உணர்ந்து தந்தையை தழுவிக் கொள்கிறான்.

தந்தை மகன் உறவைச் சொல்லும் விதமாக அமைந்தது Riding alone for thousands of Miles எனும் சீன மொழிப்படம். அப்பாவின் பெயர் தகாதா. மகன் பெயர் கெனிச்சி. இருவரும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள். மனைவிதான் தந்தை மகனுக்கு பாலமாய் இருக்கிறார். ஒருகட்டத்தில் மனைவி இறந்துவிட இருவரும் ஆண்டுக்கணக்கில் பிரிந்து வாழ்கின்றனர். ஒரு நாள் மகன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது வருகிறார் தந்தை. அப்போதும் மகன் தந்தையைப் பார்க்க விருப்பமில்லையென சொல்லி திருப்பிவிடுகிறார்.

தன் மகன் நாட்டார் கலைகளை படம் எடுக்கும் எண்ணத்தை நிறைவேற்ற தானே அந்த 1000 மைலுக்கு அப்பாலுள்ள கிராமத்துக்கு செல்கிறார். பல இடரை சந்திக்கிறார். இதைக் கேள்விப்பட்ட மகன் மகிழ்ச்சியடைகிறான். ஆனால், சில நாள்களில் மகன் இறந்த செய்தி தந்தைக்கு வருகிறது. இறக்கும் முன் தந்தையை நான் புரிந்துகொள்ளவில்லை என மனைவியிடம் புலம்புகிறார். தான் எடுத்த படத்தில் ``முகமூடியில்லாமல் பழக வேண்டிய மகனிடம் முகமூடியுடன் பழகியதில் உறவை இழந்ததாக காட்சி வரும்". அதை நினைத்துக்கொண்டே தன் கிராமத்துக்கு அப்பா செல்வதாய் படம் முடியும். ஒரு தந்தை தன்னையே திருத்திக் கொள்வதாய் அமைந்திருக்கும்.
முழுவாழ்க்கையில் ஏதேனும் ஒரு தருணத்தில் அப்பா நம் வாழ்க்கையை உணர வைப்பார். அது 7ஜி ரெயின்போ காலனியில் மகனின் அப்பாய்ன்மென்ட் ஆர்டர் பார்த்து அழும் விஜயனின் காட்சியைச் சொல்லலாம். அதேபோல் மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் மகனுக்கு போட்டோக்கலையை உணர்த்தும் தன் தந்தையை அதன் பிறகு பிரம்மிப்பாய் பார்க்கும்போது நீ படித்த பள்ளிக்கூடத்தில் நான் ஹெட்மாஸ்டர் என சொல்லுவது போல் இருக்கும்.

அப்பாக்களை பொறுத்தவரை குழந்தை என்பது கொஞ்சிப் பேச விளையாடுவது மட்டும்தான். மற்றவை அனைத்துக்கும் தாய்தான் என எழுதியிருப்பார் எஸ்.ரா. இது ஒரு நிதர்சனமான உண்மையும் கூட.

கு.அழகிரிசாமியின் `ஒரு மாத லீவ்' எனும் ஒரு கதை உதாரணம். எல்லோரும் அலுவலகத்தில் விடுப்பு எடுக்கிறார்களே தானும் ஒரு மாதம் விடுப்பு எடுத்து வீட்டில் இருக்க நினைப்பார் சந்திரசேகர். விடுப்பு கிடைத்துவிடும். சம்பளம் வாங்கியவுடன் சினிமா, பீச் என குழந்தைகளை அழைத்துச் சென்று செலவு செய்து பத்தாம் தேதியே சோலி சுத்தமாகிவிடும். பத்து நாளில் விடுப்பு திகட்டிவிடும். மூன்று குழந்தைகளும் நச்சிப் பிடுங்கும். சத்தம் போடுவார், எரிந்து விழுவார். ஒரு கட்டத்தில் லீவை ரத்து செய்துவிட்டு மீண்டும் ஆபீஸ் போகும்போது குழந்தைகள் குதூகலிப்பார்கள்.
சுஜாதாவின் அப்பா அன்புள்ள அப்பா கதையில் அப்பாவின் அந்திம நாள்களை எழுதியிருப்பார். இறந்தபின் தகனம் செய்த செலவு அனைத்தும் அவர் அக்கவுன்டில் இருக்கும். கடைசிவரை அப்பாக்கள் யாரை நம்பியும் நான் இல்லை எனும் வீராப்பு இருப்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது. மூன்று நாள்களுக்கு மேல் மகன் வீட்டில் தங்குவதை இழுக்கு என நினைக்கிறார்கள். யார் தயவின்றியும் இருக்க வேண்டுமென மூர்க்கமாய் திட்டமிடுகிறார்கள்.

கடைசிவரை அந்த கெத்தை விட்டுக் கொடுக்காமல் தொடர்கிறார்கள். சில மகன்கள் இந்தப் போக்கை அடியோடு சிதைக்க நினைக்கும்போது பிரச்னை உருவாகிறது.

உண்மையில் அப்பாக்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள். தாமரை இலைபோல் இருவரும் ஒட்டமாட்டார்களா? அப்பாக்களை பொறுத்தவரை சுயசார்பாய் இருக்க வேண்டும். எந்த கெட்ட பழக்கத்திற்கோ அல்லது நடத்தை பிறழ்வோ மகனுக்கு நேர்ந்துவிடக் கூடாது என கவனத்துடன் கண்காணித்துக் கொண்டே இருப்பார். இக்கட்டத்தை வெற்றிக்கரமாய் தாண்டி விட்டான் எனில் தான் சொல்ல அல்லது வழிகாட்ட ஒன்றுமில்லாத போது தந்தைக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. மகன் என்னை மதிப்பதில்லை என ஒருமனதாய் மனதில் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு அதையே கட்டமைத்து விடுகிறார்கள். ஜாதகத்தில் கூட அப்பாவும் மகனும் பார்த்துக்கொள்ள கூடாது எனச் சொல்லி சில நாள்கள் பிரித்து வைத்துள்ள குடும்பங்களும் உண்டு.

இதையெல்லாம் ஆய்ந்து அவன் நல்ல தகப்பன் ஆக நினைக்கும்போது அவன் மகனின் பார்வையில் வேறு கோணத்தில் வில்லனாய் மாறியிருப்பார். காலம் காலமாக பெரும்பாலான குடும்பங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. மகனுக்கு தான் தந்தையாக முடிவதில்லை.

பேரன்களுக்காக தந்தையாக மாறுகின்றனர் தாத்தாக்கள். அப்பாக்கள் சொன்னது சரி எனவும் அவரின் பிடிவாதங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை வரும்போது காலம் கடந்திருக்கும். ஒரு நாள் அப்பா தோழனாகும் தருணம் வாய்க்கும் அப்போது நீங்கள் அப்பாவாகியிருப்பீர்கள் என்பார் நா.முத்துக்குமார். உண்மையில் ``இருக்கும்போது நம்பியாராகவும், இல்லாதபோது எம்.ஜி.ஆராகவும் மாறுகிறார்கள் அப்பாக்கள் மகனுக்கு."

-மணிகண்ட பிரபு

Wednesday, December 16, 2020

ஆரோக்கியத்திற்கு ஒரு செக் லிஸ்ட்

 ஆரோக்கியத்திற்கு ஒரு செக் லிஸ்ட்

ஆரோக்கியமாக ஒவ்வொருவரும் வாழ இந்த உலகில் நாம் கடைப்பிடிக்க  வேண்டிய பல நல்ல விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுகவனமாக  வாசித்து ஆம் அல்லது இல்லை என்பதில் ‘டிக்’ செய்து கொள்ளவும்இறுதியில்  பதிலளித்தவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு உங்களின் வாழ்க்கையில்  ஆரோக்கியத்தின் நிலையை சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

எண்

கேள்விகள்

ஆம்

இல்லை

1

நீங்கள் நலமாக இருப்பதாக நம்புகிறீர்களா?

 

 

2

நீங்களும், உங்களைச் சுற்றியுள்ளவர்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டு சங்கல்பம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?

 

 

3

பிரார்த்தனையுடன் சாப்பிட ஆரம்பிக்கிறீர்களா ?

 

 

4

சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவிக் கொள்கிறீர்களா?

 

 

5

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு வேளையாவது பசி எடுத்த பிறகே சாப்பிடுகிறீர்களா?

 

 

6

உணவை வாயை மூடி நன்கு மென்று கூழ் போலாக்கி விழுங்குகிறீர்களா?

 

 

7

உணவை ரசித்து ருசித்து உண்ணுகிறீர்களா?

 

 

8

சாப்பிடுகிறேன் என்ற முழு நினைவோடும், கவனத்தோடும் சாப்பிடுகிறீர்களா?

 

 

9

உண்பதை உப்பில் ஆரம்பித்து இனிப்பில் முடிக்கிறீர்களா?

 

 

10

சாப்பிடும்போது டி.வி பார்ப்பதை தவிர்த்து விட்டீர்களா?

 

 

11

சாப்பிடும்போது புத்தகம் படிப்பதில்லையா ?

 

 

12

யாருடனும் அதிகம் பேசாமல் சாப்பிடுகிறீர்களா?

 

 

13

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும், பின்னும் / இடையில் தேவையின்றியும் தண்ணீர் குடிக்காமலிருக்கிறீர்களா?

 

 

14

நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தொங்க விடாமல் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களா?

 

 

15

ஸ்பூன் போன்றவைகளை உபயோகிக்காமல் உணவைக் கையால் எடுத்து சாப்பிடுகிறீர்களா?

 

 

16

சாப்பிட்டால் பிறகு சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து குளிக்கிறீர்களா? ஒரு வேளை குளித்து விட்டால் சுமார் 45 நிமிடம் கழித்து சாப்பிடுகிறீர்களா?

 

 

17

கூடுமானவரை ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து, வீட்டு உணவுகளையே சாப்பிடுகிறீர்களா?

 

 

18

முடிந்தவரை உங்கள் உணவில் அவ்வப்போது ஆறு சுவைகளையும் சேர்த்துக் கொள்கிறீர்களா?

 

 

19

வயிறு நிரம்ப, வயிறு புடைக்கும் அளவிற்கு மூச்சு முட்ட உண்பதைத் தவிர்த்து விட்டீர்களா?

 

 

20

கோபமான / கவலையான / பயம் மிகுந்த மனநிலையில் உண்பதைத் தவிர்க்கிறீர்களா?

 

 

21

அசைவ உணவுகளைக் கூடுமானவரைத் தவிர்க்கிறீர்களா? ஒரு வேளை உண்டு விட்டால், உண்ட உணவு செரிக்கும் அளவிற்கு உடலுக்கு வேலை தருகிறீர்களா?

 

 

22

உழைப்பிற்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ற உழைப்பு என்று கடைப்பிடிக்கிறீர்களா?

 

 

23

அந்தந்த பருவத்தில் கிடைக்கும் இனிப்பான பழங்களை உணவோடு சேர்த்துக் கொள்கிறீர்களா?

 

 

24

வடக்கு நோக்கி உட்கார்ந்து உண்பதை தவிர்க்கிறீர்களா?

 

 

25

மருந்து, மாத்திரைகளைப் படிப்படியாகக் குறைத்து விட்டீர்களா? அல்லது நிறுத்தி விட்டீர்களா?

 

 

26

மாலை வேளையில் எந்தவித நொறுக்குத் தீனிகளும் அதிகம் சாப்பிடாமல் இருக்கிறீர்களா? (இது இரவு உணவிற்கான பசியைத் தள்ளிப் போட்டு விடும்)

 

 

27

காற்றடைக்கப்பட்ட பாக்கெட்களில் வைத்து விற்கப்படும் (PACKED FOOD ITEMS) தின்பண்டங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கிறீர்களா? (ம்:குர்குரே)

 

 

28

அஜினோமோட்டா போன்ற ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும் ஃபாஸ்ட் புட் வகை உணவுகளைத் தவிர்க்கிறீர்களா?

 

 

29

பிராய்லர் கோழிசிக்கன் உணவுகளை முற்றிலுமாக ஒதுக்கி விட்டீர்களா?

 

 

30

இரவு 9 மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக் கொள்கிறீர்களா?

 

 

31

இரவு உணவாக எளிதில் ஜீரணமாகும் கஞ்சி, பழங்கள் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்கிறீர்களா?

 

 

32

பெரிய ஷோரூம்களில் விற்கப்படும் பளபளப்பான, விதை நீக்கம் செய்யப்பட்ட பழ வகைகளை ஒதுக்கி, நாட்டுப் பழங்களை மட்டுமே உண்ணுகிறீர்களா?

 

 

33

அனாடமிக் தெரபியை முழுமையாக கடைப்பிடிக்க ஆரம்பிக்கும்போது இது வரை தங்கியிருந்த கழிவுகள் காய்ச்சல், வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, சளி, தூக்கம் போன்றவை மூலம் வெளியேற்றப்படுவதைக் கண்டு பயப்படாமல், தொந்தரவுகளாக கருதாமல், சிகிச்சை நடைபெறுவதாக புரிந்து கொள்வீர்களா?

 

 

34

தாங்க முடியாத தலைவலி போன்றவை ஏற்படும் பட்சத்தில் ஆங்கில மருத்துவம் செய்து கொள்ளாமால், முத்ரா, அகுபிரஷர், அகுபங்சர் போன்ற மரபு வழி மருத்துவத்தை மட்டுமே நாடுகிறீர்களா?

 

 

35

அஸ்கா என்னும் வெள்ளைச் சர்க்கரை உபயோகிப்பதை முழுமையாக நிறுத்தி விட்டீர்களா?

 

 

36

இனிப்புச் சுவைக்காக இரசாயனங்கள் கலக்காத நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், கருப்பபட்டி போன்றவற்றை உபயோகிக்கிறீர்களா?

 

 

37

உங்கள் உணவுகளில் கம்பெனி வகை பிராண்டட் எண்ணெய்களை முழுமையாகத் தவிர்த்து உங்கள் நம்பிக்கைக்குரியவர் மூலம் (வாங்கிய) செக்கில் ஆட்டிய எண்ணெய்களை உபயோகிக்கிறீர்களா?

 

 

38

உங்கள் சமையலறையிலிருந்து கம்பெனி வகை பிராண்டட் அயோடின் கலந்த உப்பு வகைகளை வெளியேற்றி விட்டீர்களா?

 

 

39

உப்புச் சுவைக்காக, வெயிலில் உலர்த்தி, லேசாக வறுத்து அயோடின் நீக்கம் செய்த சாதாரண கல் உப்பை  அல்லது இந்துப்பை உபயோகிக்கிறீர்களா?

 

 

40

இரசாயனங்களை நஞ்சாகக் கருதி கூடுமானவரை இரசாயனங்கள் கலவாத இயற்கை விவசாய உணவுப் பொருட்களையே உபயோகிக்கிறீர்களா?

 

 

41

உங்கள் சமையலுக்குத் தேவையானப் பொடி வகைகளை நீங்களே தயார் செய்து உபயோகித்துக் கொள்கிறீர்களா?

 

 

42

மது, புகை போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்த்துள்ளீர்களா?

 

 

43

ஒரு நாளைக்கு இரு முறை மலம் எளிதாகக் கழிக்கிறிர்களா?

 

 

44

வாரம் இரு முறை நல்லெண்ணெய்க் குளியல் செய்கிறீர்களா?

 

 

45

வருடம் இரு முறையாவது பேதி மருந்து சாப்பிட்டுக் குடல் சுத்தம் செய்து கொள்கிறீர்களா?

 

 

46

மல,ஜலத்தை அடக்கி வைக்காமல் அவ்வப்போது வரும் போது போகிறீர்களா?

 

 

47

ஐந்து நாள் பயிற்சியில் கற்று கொண்ட கண், மூ்க்கு கழுவுதல், அஹிம்சா எனிமா ஆகியவற்றை அவ்வப்போது மேற்கொண்டு கழிவுகளை நீக்கிக் கொள்கிறீர்களா?

 

 

48

வடக்கு அல்லது தெற்கு நோக்கி மட்டுமே உட்கார்ந்து மல,ஜலம் கழிக்கிறீர்களா?

 

 

49

குளிர்சாதனப் பெட்டியின் உபயோகத்தை கூடுமானவரைத் தவிர்த்துக் கொள்கிறீர்களா?

 

 

50

உங்கள் சமையலறையில் பிளாஸ்டிக் பாட்டில், டப்பாக்கள் உபயோகத்தைக் குறைத்து விட்டீர்களா? பாத்திரங்கள் துலக்க இராசாயன சோப் பவுடர்களைத் தவிர்க்கிறீர்களா ?

 

 

51

தாகம் எடுக்கும் போது மட்டுமே தண்ணீர் அருந்துகிறீர்களா?

 

 

52

மினரல் வாட்டர், ஃபில்டர் வாட்டர், ஐஸ் வாட்டர் போன்றவற்றை உபயோகிப்பதை நிறுத்தி விட்டு மண் பானை () செம்புக் குடத்தில் ஊற்றி வைத்த சாதாரணக் குழாய் நீரைக் குடித்து வருகிறீர்களா?

 

 

53

கொதிக்க வைத்த நீரை குடிப்பதில்லைதானே?

 

 

54

அன்ணாந்து மடமடவென ஒரு செம்பு நீரையும் ஒரே மூச்சில் குடிக்காமல், மிடறு மிடறாக உதடு நனையும் வகையில் தண்ணீரைச் சப்பிக் குடிக்கிறீர்களா?

 

 

55

சிறுநீர்க் கழித்தால் உடனே தண்ணீர் குடித்துக் கொள்கிறீர்களா?

 

 

56

பிளாஸ்டிக் / சின்டெக்ஸ் டேங்க்கைப் பயன்படுத்தாமல், சாதாரண சிமெண்ட் தொட்டியை மேல்நிலைத் தொட்டியாகப்  பயன்படுத்துகிறீர்களா?

 

 

57

மேல்நிலை நீர்த் தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்கிறீர்களா?

 

 

58

ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்என்ற நிபந்தனைகளை மனதில் கொண்டு தாகமில்லாத போதும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா?

 

 

59

டீ, காப்பி போன்ற பானங்கள் குடிப்பதை விட்டு விட்டீர்களா?

 

 

60

பாக்கெட் பால் உபயோகத்தை உங்கள் வீட்டில் முற்றிலுமாக  நிறுத்தி விட்டீர்களா?

 

 

61

பன்னாட்டுக் கம்பெனிகளால் தயாரிக்கப்படும் இரசாயனத்தால் ஆன குளிர்பானங்களைக் குடிக்காமல் தவிர்க்கிறீர்களா?

 

 

62

அவசியமானால் மோர், இளநீர், தேங்காய்ப் பால், காய்கறி சூப் போன்ற பானங்களை அருந்துகிறீர்களா?

 

 

63

நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வசிக்கிறீர்களா?

 

 

64

படுக்கை அறையில் ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொண்டுப் படுத்துத் தூங்குகிறீர்களா?

 

 

65

கொசுவர்த்தி, லிக்விடேட்டர் போன்றவற்றை உபயோகிப்பதை நிறுத்தி விட்டீர்களா?

 

 

66

நல்ல காற்று உள்ளே வந்து கெட்ட காற்று வெளியேறும் வகையில் உங்கள் வீட்டின் அமைப்பு உள்ளதா?

 

 

67

உங்கள் வீடு முழுவதும் காற்றும், வெளிச்சமும் ஓரளவிற்காவது சம விகிதத்தில் இருக்கிறதா?

 

 

68

உங்கள் படுக்கை இடைஞ்சலாக இல்லாமல் நன்கு தாராளமாக உள்ளதா?

 

 

69

வெறும் தரையில் படுக்காமல் பாய் அல்லது இலவம் பஞ்சு மெத்தையில் படுக்குகிறீர்களா/

 

 

70

உங்கள் படுக்கையறைக்குள் ஃப்ரிட்ஜ் போன்ற ரேடியேஷன் வெளிப்படும் பொருட்கள் இல்லாமல் இருக்கிறதா?

 

 

71

உங்கள் படுக்கையின் தலைமாட்டில் செல்போனை வைத்துக் கொள்ளாமல் தூங்குகிறீர்களா?

 

 

72

குறைந்தது 6 மணி நேரமாவது தூங்குகிறீர்களா? அல்லது ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா?

 

 

73

தூக்கத்திற்கும், ஓய்விற்குமான வித்தியாசத்தை அறிந்து கொண்டு தூக்கம் வராதபோது அதற்காக கவலைப்படாமல் வெறுமனே ஓய்வு மட்டும் எடுத்துக் கொள்கிறீர்களா

 

 

74

நேரத்திலேயே இரவு படுத்து, அதிகாலையிலேயே எழுந்து கொள்கிறீர்களா?

 

 

75

இரவு 10 மணிக்குள் தூங்கி விடுகிறீர்களா? இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீர்களா?

 

 

76

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பற்களைத் துலக்கிக் கொண்டுப் படுப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளீர்களா?

 

 

77

.சி அறையில் உறங்கினாலும் அறையின் வெப்பநிலை, உடலின் வெப்பநிலைக்கு இணையாக இருக்கும்படி அதாவது குளிரும் இல்லாமல், புழுக்கமும் இல்லாத வகையில் அறையின் வெப்ப நிலையை வைத்துக் கொள்கிறீர்களா

 

 

78

படுக்கும் போதும், படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதும் ஒருக்களித்தவாறு ஒரு பக்கமாக கை ஊன்றி படுக்கவும், எழவும் செய்கிறீர்களா?

 

 

79

வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் படுத்துத் தூங்குகிறீர்களா ?

 

 

80

மார்பிள், கிரானைட், போன்றவை கொண்டு செய்யப்படாத  தரைப்பகுதியுள்ள வீட்டில் நீங்கள் வாழ்கிறீர்களா?

 

 

81

உங்கள் சக்தி வீண் விரயமாகாமல் இருக்க படுக்கையிலோ அல்லது பயணத்திலோ உங்களுக்கு நேராக (ஃபேன்) காற்று அடிக்காதவாறு படுத்துக் கொள்கிறீர்களா? அல்லது உட்காருகிறீர்களா?

 

 

82

காலையில் மல, ஜலம் கழித்ததும் உடல் மூட்டுக்களுக்கு அசைவு கொடுக்கும் சிறு,சிறு உடற்பயிற்சிகளையாவது குறைந்த பட்சம் செய்கிறீர்களா?

 

 

83

மூச்சுப் பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை தினமும் செய்கிறீர்களா?

 

 

84

மிருதுவான, காலுக்கு இதமான செருப்புக்களை அணிந்து நடப்பதை தவிர்க்கிறீர்களா அல்லது அவ்வப்போது வெறும் காலில் நடப்பதையே செயல்பாட்டில் வைத்துள்ளீர்களா?

 

 

85

குளிப்பதற்கு நன்கு சூடான சுடுதண்ணீர் உபயோகிக்காமல், வெதுவெதுப்பான, விளாவிய அல்லது குளிர்ந்த நீரையே உபயோகிக்கிறீர்களா?

 

 

86

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விடுகிறீர்களா?

 

 

87

சோப், ஷாம்பூ உபயோகத்தை முற்றிலுமாக நிறுத்தி விட்டீர்களா?

 

 

88

பல் துலக்க பேஸ்ட் உபயோகிப்பதை நிறுத்தி விட்டு நீங்களே தயார் செய்த அல்லது உள்ளூர் தயாரிப்பு பற்பொடிகள் அல்லது வேப்பங்குச்சி, மிஸ்வாக் குச்சி போன்ற ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துகிறீர்களா?

 

 

89

தலைக்கு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயையே தேய்த்துக் கொள்கிறீர்களா?

 

 

90

டி.வி.யில் விளம்பரம் செய்யப்படும் உணவுப் பொருள்களையும், போஷாக்கு பானங்களையும், காஸ்மெடிக்ஸ் பொருட்களையும், மருத்துவப் பொருட்களையும் உங்கள் பயன்பாட்டிலிருந்து முடிந்தவரை விலக்கி விட்டீர்களா?

 

 

91

தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதிலிருந்து நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் முற்றிலுமாக விலகி விட்டீர்களா?

 

 

92

புத்தி, மனசு இரண்டும் செயல்படும் வித்தியாசத்தைப் புரிந்து கொண்டீர்களா?

 

 

93

வாரம் ஒரு நாளாவது தினசரி வழக்கமான வேலைகளிருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா?

 

 

94

உங்கள் எண்ணம், பிரார்த்தனை ஆகியவை நேர்மறையாக (பாசிட்டிவாக) இருக்கிறதா?

 

 

95

எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் (நெகட்டிவ்) உங்களைச் சந்தித்துப் பேசினால் / செயல்பட்டால் அங்கிருந்து நகர்ந்து விலகி விடுவீர்களா?

 

 

96

உங்கள் பாசிட்டிவ் எண்ணங்களை மற்றவர்களிடம் அவர்கள் நலனுக்காகவும், உங்கள் நலனுக்காகவும் வெளிப்படுத்துவீர்களா?

 

 

97

உடம்புக்கு வேலை கொடுக்கும் விதத்தில் பணிகளை மேற்கொள்கிறீர்களா?                    (-ம்: நடப்பது, படி ஏறுவது )

 

 

98

ஹீலர் பாஸ்கர் நடத்தும் ஐந்து நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஐந்து நாள் பயிற்சி வகுப்பின் முழு வீடியோ தொகுப்பையும் முழுமையாக பார்த்துப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?

 

 

99

அகுபங்சர், அகுபிரஷர், வர்மா, முத்ரா, சித்தா போன்ற மரபு வழி மருத்துவ முறைகள் ஏதாவது கற்றுக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது அதற்கான ஆர்வத்தில் இருக்கிறீர்களா?

 

 

100

இனம், சாதி, மதம் கடந்து நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வீர்களா?

 

 

மேலே உள்ள கேள்விகளுக்குஆம்என விடையளித்திருக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து இப்பொழுது நீங்கள் இருக்கும் ஆரோக்கியத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

 “ஆம்என பதிலளித்திருப்பவற்றின் எண்ணிக்கை

உங்கள் ஆரோக்கியத்திற்கான நிலை

90  க்கும் அதிகமாக இருந்தால்

முழு ஆரோக்கிய வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் ஆனந்தமடைந்து கொள்ளலாம்.

70 க்கும் அதிகமாக இருந்தால்

முழு ஆரோக்கிய வாழ்க்கையை நோக்கி வந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் முயற்சிக்க வேண்டும்


50 – 70 கேள்விகளுக்கு எனில்

நீங்கள்இல்லைஎன்று பதிலளித்த விஷயங்களில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் நீங்கள் அவசியம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

50 க்கு குறைவாக இருந்தால்

முழுமையான ஆரோக்கிய வாழ்க்கையை நாடி நீங்கள் வரவில்லை, மேலும் உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியக் குறைபாடு இருக்கும் என்றும் பொருள்.

நீங்களும்இல்லைஎன்று பதிலளித்தவற்றில் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் நீங்கள் அவசியம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்


மேலே குறிப்பிட்டுள்ள நல்ல விஷயங்களையும், இன்னும் இதில் குறிப்பிடப்படாத ஆரோக்கியத்திற்கான நல்ல விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்தால் அவற்றையும், அவற்றில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் நீங்கள் கடைப்பிடித்து,. அதன் மூலம் அனைவரும் ஆரோக்கியத்தை முழுமையாக பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

வாழ்க வையகம்வாழ்க வளமுடன் !!